மரினா பேயில் உள்ள ‘எஸ்பி’ குழுமத்தின் மிகப் பெரிய அளவிலான நிலத்தடி வட்டாரக் குளிரூட்டு முறையில் சன்டெக் சிட்டி இணைந்துகொள்ளவிருக்கிறது.
இதன் மூலம், ஏற்கெனவே உலகின் அத்தகைய ஆகப் பெரிய கட்டமைப்பு விரிவடையவிருப்பதாக ‘எஸ்பி’ குழுமமும் சன்டெக் சிட்டியும் ஏப்ரல் 29ஆம் தேதி கூறின.
ஒப்பந்தத்தின்கீழ், ‘எஸ்பி’ குழுமம், சன்டெக் சிட்டியின் குளிரூட்டு முறையின் செயல்பாட்டுக்குப் பொறுப்பேற்கும். அந்தக் குளிரூட்டு முறை 2027ஆம் ஆண்டுக்குள் மரினா பே வட்டாரக் குளிரூட்டு கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும்.
ஒரே ஒரு மையப்படுத்தப்பட்ட குளிரூட்டுச் சாதனத்தைக் கொண்டுள்ள சன்டெக் சிட்டியின் குளிரூட்டு முறை, அதன் ஐந்து அலுவலகக் கட்டடங்கள், சில்லறைப் பேரங்காடி, மாநாட்டு மண்டபம் ஆகியவற்றுக்குக் குளிரூட்டுச் சேவைகளை வழங்குகிறது.
சன்டெக் சிட்டி உட்பட, செயல்பாட்டில் உள்ள தற்போதைய ஒட்டுமொத்தக் குளிரூட்டு ஆற்றல் 203,000 ‘ரெஃப்ரிஜெரன்ட் டன்’ அளவில் இருக்கும். சிங்கப்பூரில் வட்டாரக் குளிரூட்டுத் தீர்வுகளுக்கான ஆகப் பெரிய சேவை நிறுவனமாக ‘எஸ்பி’ குழுமம் திகழும்.
வட்டாரக் குளிரூட்டுக் கட்டமைப்பு, மையப்படுத்தப்பட்ட குளிரூட்டுச் சாதனங்களைப் பயன்படுத்தி, கட்டடங்களின் குளிரூட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்கிறது. இதனால் கட்டமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் சொந்தச் சாதனங்களை வாங்குவதற்கான தேவை இருக்காது.
குளிரூட்டு வசதியைப் பகிர்ந்துகொள்வதாலும், எரிசக்திப் பயனீட்டைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாலும், உறுப்பினர்கள் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கலாம்; செலவுகளை மிச்சப்படுத்தலாம்.