சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி வெலரி தியென், ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் துணைத் தலைமைச் சட்ட அதிகாரியாகப் பதவியேற்பார்.
அந்தப் பதவியை அவர் இரண்டு ஆண்டுகள் வகிப்பார். இதன் விவரங்களைப் பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை (மார்ச் 23) அறிக்கையொன்றில் வெளியிட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் நீதிபதி தியென் உச்சநீதிமன்றத்தில் சேவையாற்றிவருகிறார். அவர் மார்ச் 31ஆம் தேதி அப்பதவியில் இருந்து விலகுவார்.
திரு லையனல் யீ, திரு டாய் வெய் ஷியோங், திரு கோ யீஹான் ஆகிய துணைச் சட்ட அதிகாரிகள் குழுவில் திருவாட்டி தியென் இணைந்துகொள்வார்.
அவருக்கு 1988ஆம் ஆண்டில் அதிபர் கல்விமான் விருது வழங்கப்பட்டது. அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் டவுனிங் காலேஜில் 1991ஆம் ஆண்டு இளநிலைப் பட்டம் பெற்றவர்.
அவரது முதுநிலைப் பட்டம் 1995ஆம் ஆண்டு ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பெறப்பட்டது.
சிங்கப்பூர் சட்டத்துறையில் அவர் 1992ஆம் ஆண்டில் இணைந்தார். அங்கு அவர் சட்ட அலுவலக மூத்த அதிகாரியாக இருந்ததோடு சட்ட அமைச்சில் துணைச் செயலாளர் பதிவையையும் வகித்துள்ளார்.


