லாஸரஸ் தீவில் உள்ள ‘ஈகல் பே’ கடற்கரையில் தற்போது அனைத்து கடல்சார்ந்த நடவடிக்கைகளும் மீண்டும் துவங்கியுள்ளன.
கடந்த ஜூன் 14ஆம் தேதி ஏற்பட்ட பெரிய அளவிலான எண்ணெய்க் கசிவைத் தொடர்ந்து, அந்தப் பகுதி இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தது.
நீச்சல், கடல் சார்ந்த நடவடிக்கைகள் இப்போது அனுமதிக்கப்படுவதாக செந்தோசா மேம்பாட்டுக் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
கடல் சார்ந்த நடவடிக்கைகளை வழங்கும் கடற்கரை வர்த்தகங்களும் இப்போது செயல்பாட்டில் உள்ளன.
‘செந்தோசா கோவ்’க்கும் லாஸரஸ் தீவுக்கும் இடையே, ஆகஸ்ட் 17க்கும் செப்டம்பர் 1க்கும் இடைப்பட்ட காலத்தில் வருகையாளர்களுக்கு இலவசப் படகுச் சவாரிகள் வாரயிறுதிகளில் வழங்கப்படுகின்றன.
துப்புரவுப் பணிகளுக்குப் பிறகு கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் வகையில் அவை வழங்கப்படுகின்றன.
அந்தப் படகுகள் இருபது நிமிட இடைவெளியில் காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையிலும், 40 நிமிட இடைவெளியில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செயல்படும்.
மூன்று வாரயிறுதிகளில் வழங்கப்படும் நடவடிக்கைகளில், $5 கட்டணத்தில் மிதவையில் நின்றுகொண்டே செல்லும் விளையாட்டு (paddling), மூன்று மணி நேர வழிகாட்டி உதவியுடன் கூடிய நடை உள்ளிட்டவை அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர், எண்ணெய்க் கசிவைத் தொடர்ந்து, செந்தொசாவில் உள்ள சிலோசோ கடற்கரை ஆகஸ்ட் மூன்றாம் தேதி மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.
பலவான், தஞ்சோங் கடற்கரைகள் துப்புரவுப் பணிகள் நிறைவுபெற்றதும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.