மக்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், உலகமயமாதல் போன்ற சவால்களை எதிர்கொள்பவர்களை சிங்கப்பூர் தனது பக்கம் வைத்திருக்க வேண்டும் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
இவ்வாண்டின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்வி மாநாட்டில் கலந்துகொண்ட அவர், ‘தென்கிழக்காசியாவின் ஒற்றுமையான எதிர்காலம்’ எனும் கருப்பொருளை ஒட்டிப் பேசினார்.
“பன்முக கலாசாரம் போற்றும் நாடான சிங்கப்பூர், ஆசியான் நாடுகளுக்கு இடையே ஒரு வலுவான பாலமாக உள்ளது,” என திரு ஹெங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 600 பேர் கலந்துகொண்டனர். திரு ஹெங் உள்ளிட்ட நான்கு பேச்சாளர்கள், தென்கிழக்காசிய நாடுகள் இடையே மேம்படக்கூடிய ஒத்துழைப்பு, திறன் மேலாண்மை போன்றவற்றைப் பற்றி கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் இறுதியில் கேள்வி-பதில் அங்கமும் இடம்பெற்றது. பொருளியல் வளர்ச்சி, கலாசாரப் பாதுகாப்பு, திறன் மேலாண்மை போன்ற தலைப்புகள் தொடர்பில் பங்கேற்பாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
திறனாளர்கள் வளர்ந்துவரும் நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்த நாடுகளுக்குச் செல்லும் போக்கு பற்றிய கேள்விக்கு, “வளர்ச்சி வாய்ப்புகள் அளிக்கும் இடங்களுக்கு ஊழியர்கள் செல்வதுண்டு,” எனப் பதிலளித்தார் திரு ஹெங்.
மேலும், ஊழியர்களைப் பணியமர்த்தி, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் சிங்கப்பூர் தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று திரு ஹெங் கூறினார்.
“தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை நாடுவது அவசியம்,” என்றார் அவர்.

