சிங்கப்பூரின் கரிமச் சேவைத் துறை, புதிய திட்டங்களாலும் ஆய்வுகளாலும் பிரபலமடைகிறது.
இருந்தபோதும், இத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்குத் திறன் பற்றாக்குறை இடையூறாக இருக்கலாம் என்று அந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கரிமச் சேவைத் துறையில் 150க்கும் அதிகமான நிறுவனங்கள் தற்போது சிங்கப்பூரில் உள்ளன. இந்த எண்ணிக்கை, 2021ல் பதிவான இத்தகைய நிறுவனத்தைக் காட்டிலும் இரண்டு மடங்காக உள்ளது.
நீடித்த நிலைத்தன்மை ஆலோசகர்கள், கரிமத்திட்ட மேம்பாட்டாளர்கள், கரிம வெளியீடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்கள் என உள்ளூர், உலகப் பங்காளிகளைக் கொண்டுள்ளது இங்குள்ள கரிமச் சேவைத் துறை.
கரிமச் சேவைத் துறைக்காக, நிதித்துறை, கொள்கை ஆய்வு, சுற்றுப்புற அறிவியல் ஆகிய மூன்றிலும் வல்லுநர்களைத் தேடி பணியில் அமர்த்துவது அரிது என்று பீஸீரோ கார்பன் கரிம மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டோமி ரிக்கெட்ஸ் தெரிவித்தார்.
மே 5ஆம் தேதி ஜென்ஸீரோ பருவநிலை உச்சநிலைக் கூட்டத்தில் பேசிய திரு ரிக்கெட்ஸ், சிங்கப்பூரில் இந்தத் துறையில் உள்நாட்டுத் திறனாளர்களுக்கும் வெளிநாட்டுத் திறனாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறினார்.

