அதிபர் தர்மன் சண்முகரத்னம், முன்னாள் பிஎஸ்ஏ இன்டர்நேஷனல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் சோங் மெங்கை, ஜூன் 2ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் அதிபர் ஆலோசனை மன்றத்தின் தலைவராக நியமித்துள்ளார்.
ஜூன் 2024ல் அதிபர் ஆலோசனை மன்றத்துக்கு நியமிக்கப்பட்ட டான், ஆகஸ்ட் 2018ல் மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
திரு எடி டியோ, 2019 ஜனவரி 2ஆம் தேதி முதல் மன்றத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
அரசாங்கத்தின் கடந்தகால கையிருப்புகள் மற்றும் பொதுச் சேவையில் உள்ள முக்கிய அதிகாரிகளின் நியமனங்கள் போன்ற தனது பாதுகாப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது, அதிபர் ஆலோசனை மன்றம் நாட்டின் அதிபருக்கு ஆலோசனை வழங்குகிறது.
அரசியலமைப்பின்படி, அதிபர் தனது பாதுகாப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது மன்றத்துடன் கலந்தாலோசிப்பது கட்டாயமாகும்.
செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 2) வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில், சிங்டெல் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் சுவா சாக் கூங், மன்றத்தின் உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் எல்என்ஜி கார்ப்பரேஷன் தலைவர் கான் சியாவ் கீ, டிபிஎஸ் வங்கிக் குழுமத்தின் முன்னாள் தலைவர் பியூஷ் குப்தா ஆகியோர் மன்றத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்தானா அறிவித்தது.
கான் மற்றும் பியூஷ் இருவரும் முன்னர் மன்றத்தின் மாற்று உறுப்பினர்களாக இருந்தனர்.
இதற்கிடையே, எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைவர் டான் சிங் யீ மன்றத்தின் மாற்று உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் 2ஆம் தேதி முதல் இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வருவதால், ஏப்ரல் 2017 முதல் மன்றத்தில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் லிம் சீ ஓன், எடி தியோவுடன் மன்றத்திலிருந்து ஓய்வு பெறுகிறார்.
பேங்க் ஆஃப் சிங்கப்பூரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பஹ்ரென் ஷாரி, டிபிஎஸ் வங்கி மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைவர் பீட்டர் சீ, சிங்கப்பூர் பந்தயப்பிடிப்பு வாரியத் தலைவர் மில்ட்ரெட் டான்-சிம் பெங் மே, முன்னாள் தலைமை வழக்கறிஞர் சாவ் ஹிக் டின் ஆகியோர் அதிபர் ஆலோசனை மன்றத்தின் மற்ற உறுப்பினர்கள்.
மன்றத்திலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அதிபர் தர்மன், திரு எடி டியோவுக்குப் புகழாரம் செலுத்தியுள்ளார். தனது கடிதத்தில், தியோ மன்றத்துக்குக் கொண்டு வந்த ஞானம், உறுதிப்பாடு, நேர்மைக்காக அதிபர் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

