மலேசியாவில் வாங்கப்பட்ட ஆபரணங்களைப் பற்றித் தெரிவிக்காமல், அதற்கான பொருள் சேவை வரியைச் செலுத்தத் தவறிய சிங்கப்பூர் மாதிற்கு அரசு நீதிமன்றங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி $11,400 அபராதம் விதித்தது.
நபீலா ஜாஃபர் அல்-காதிரி, 32, என்ற அந்த மாது தம் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு அபராதத் தொகையைச் செலுத்தினார்.
அக்குற்றங்கள் நடந்தபோது, நபீலா மலேசியாவில் வசித்து வந்ததாகவும் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்கம், டைட்டானியம் உள்ளிட்ட ஆபரணங்களை விற்கும் இணையத் தொழிலை நடத்தி வந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் தமது பொருள்களை ஃபேஸ்புக், டெலிகிராம் போன்ற தளங்களில் விளம்பரப்படுத்தியதாகவும் மலேசியாவில் உள்ள பல்வேறு கடைகளில் இருந்து ஆபரணங்களை வாங்கி, அவற்றைத் தமது வாடிக்கையாளர்களிடம் விநியோகிப்பதற்காகச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நபீலா கைது செய்யப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட 19 ஆபரணங்களையும் அக்குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட பைகள், பெட்டிகள் உள்ளிட்ட மற்ற பொருள்களையும் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களின் மதிப்பு கிட்டத்தட்ட $10,152 எனவும் செலுத்தப்படாத பொருள் சேவை வரியின் மதிப்பு ஏறக்குறைய $946 எனவும் சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்தது.


