அங் மோ கியோ வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) நள்ளிரவுக்குப் பின் டாக்சி ஒன்று விபத்தில் சிக்கியது.
விபத்தில் 60 வயது டாக்சி ஓட்டுநரும் நான்கு பயணிகளும் காயமடைந்தனர்.
விபத்து பின்னிரவு 12.20 மணிவாக்கில் புவாங்கோக் கிரீன் மற்றும் இயோ சூ காங் சாலை சந்திப்பில் ஏற்பட்டது.
ஏஷியாஒன் செய்தியாளர்கள் விபத்து நடந்த சாலைக்கு பின்னிரவு 1 மணிவாக்கில் சென்றதாக அதன் செய்தித் தளத்தில் குறிப்பிடப்பட்டது. மஞ்சள் நிற டாக்சி விபத்தில் சிக்கியிருந்ததாகவும் அதன் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்திருந்ததாகவும் அது குறிப்பிட்டது.
விபத்தில் போக்குவரத்து விளக்குக் கம்பம் ஒன்றும் சாலை நடுவே உள்ள தடுப்புகள் சிலவும் சேதமடைந்தன.
மேலும் சம்பவ இடத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர உதவி வாகனமும், போக்குவரத்து காவல்துறையின் சுற்றுக்காவல் வாகனமும் இருந்தன.
விபத்தில் சிக்கிய பயணிகளை இரண்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர்களின் வயது நான்கிற்கும் 57க்கும் இடைப்பட்டது என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
டாக்சி ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

