சிராங்கூனில் டாக்சியும் மற்றொரு காரும் மோதிக்கொண்ட விபத்தில், 49 வயது டாக்சி ஓட்டுநரும் அந்த வாகனத்தில் பயணம் செய்த 44 வயது பெண் பயணியும் சுயநினைவுடன் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பெஹ் சியா லோர் –சிங்கப்பூர் ரோட் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட விபத்து குறித்த புகைப்படம், கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சியின் பின்பக்கம் (boot) பலத்த சேதமடைந்திருப்பதைக் காட்டுகிறது.
புகைப்படத்தின் வலதுபுறத்தில் உள்ள ஒரு கறுப்புக் காரின் முன்புறம் உள்ள ‘பம்பர்’ என்ற மோதல் தடுப்புச் சாதனம் சேதப்பட்டுள்ளதும் தெரிகிறது.
மார்ச் 17 அன்று இரவு 11.15 மணியளவில் அப்பர் சிராங்கூன் சாலையை நோக்கிச் செல்லும் சிராங்கூன் சாலையில் நடந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் அதே நேரத்தில் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், டாக்சி ஓட்டுநரும் அவரது பயணியும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
48 வயது கார் ஓட்டுநர் நடந்து வரும் காவல்துறையின் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
மேலும் விவரம் பெற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கம்பர்ட் டெல்குரோவைத் தொடர்பு கொண்டுள்ளது.