செங்காங்கில் உள்ள போக்குவரத்துச் சந்திப்பு ஒன்றில் பச்சை விளக்கு எரிந்தபோது, முன்னால் நின்றிருந்த வாகனத்தைக் கவனிக்காமல் காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக பாரி சியா ஹான் சியான் என்பவருக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 24) $4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
தொடக்கக்கல்லூரி ஆசிரியரான 43 வயது சியாவுக்கு வாகனம் ஓட்ட ஐந்தாண்டுத் தடையும் விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 16ஆம் தேதி, செங்காங் ஈஸ்ட் வேயில் அச்சம்பவம் நடந்தது.
சியாவின் கார் மோதியதில் விபத்துக்குள்ளான காரின் ஓட்டுநருக்கு முதுகுத்தண்டிலும் அவருடன் பயணித்தவருக்கு இடது தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது.
இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டைச் சியா, செப்டம்பர் 24ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தின்போது ஓட்டுநரைத் தவிர்த்து உடனிருந்த பயணிக்குக் காயம் விளைவித்த குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்குமுன் கவனத்தில் கொள்ளப்பட்டது.

