இஸ்லாமியச் சட்டங்களுக்கு முரணான போதனைகளுக்காக முன்னாள் தசைப் பிடிப்புச் சிகிச்சையாளர் ஒருவருக்கு 4 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் நிர்வாகச் சட்டத்தின் கீழ் 67 வயது முகமது ராசிஃப் ராடி என்ற ஆடவருக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இஸ்லாமில் குறிப்பிடப்பட்ட பாவங்களுடன் தொடர்புடைய போதனைகளை ராசிஃப் செய்ததைக் குறிப்பிட்ட நீதிபதி, ராசிஃப் தம்மைப் பின்பற்றுவோரிடம் தமக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதாகக் கூறியதாகச் சொன்னார்.
ராசிஃவால் பலர் பாதிக்கப்பட்டதாகவும் ராசிஃபின் செயல் பொதுமக்களின் சினத்தைத் தூண்டியதையும் நீதிபதி குறிப்பிட்டார்.
அஸாடிஸா அங்கீகாரத் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய ஆசிரியர் என்ற பொறுப்பை வகிக்காத ராசிஃப், சூதாட்டம் அனுமதிக்கப்படக்கூடும் என்று தம்மைப் பின்பற்றுவோருக்குக் கற்பித்தார். அதோடு ஆணும் பெண்ணும் ‘ஆன்மீக’ முறையில் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் ராசிஃப் போதித்தார்.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றமான முயிஸ் அதன் இணையத்தளத்தில் சூதாட்டம் தடைசெய்யப்பட்ட ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளது.
அதோடு ‘ஆன்மீக திருமணம்’ என்பது சாட்சியங்கள் இல்லாமல், முறையான திருமணப் பதிவு இல்லாமல், வரதட்சனை இல்லாமல் செய்யப்படுகிறது என்றும் முயிஸ் சொன்னது.
சிங்கப்பூரரான ராசிஃப், நபிகள் நாயகத்தின் வம்சாவழியைச் சேர்ந்த ‘இம்பா’ என்ற ஒரு நபியின் ஆவியை வரவழைக்க முடியும் என்றும் கூறிவந்தார்.
தொடர்புடைய செய்திகள்
2004, 2005ஆம் ஆண்டுகளில் தெக் வாயில் நடைபெற்ற ராசிஃபின் வகுப்புகளுக்குச் சென்றதை ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் கூறினார்.
அதில் 4டி, டோடோ ஆகிய சூதாட்டங்களின் மூலம் பெறப்பட்ட பணம் ஆன்மிக ரீதியில் தூய்மையாக்கப்பட்டு வர்த்தகங்களுக்கு முதலீடாகப் பயன்படுத்த முடியும் என்று ராசிஃப் கூறியதாக ஆடவர் சாட்சியம் அளித்தார்.
இன்னும் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ராசிஃப் அதை ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று நீதிமன்றத்தில் கூறினார்.
2023ஆம் ஆண்டு முயிஸில் பதிவுசெய்யப்படாத முஸ்லிம் சமயப் பள்ளியை ரசிஃப் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்குக்கு முந்தைய விசாரணை ஆகஸ்டில் நடைபெறும்.