தெமாசெக் நிறுவனம், இந்தியாவில் மிகக் குறைவான நிறுவனங்களில் மட்டும் அதிக அளவில் முதலீடு செய்யத் திட்டமிடுகிறது.
நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்துள்ள US$50 பில்லியன் (S$64.1 பில்லியன்) தொகையிலிருந்து கிடைக்கும் லாபத்தை அதிகரிப்பது நோக்கம்.
வெகு வேகமாக வளர்ச்சி காணும் இந்தியச் சந்தையில், முதலீட்டுத் திட்டங்களிலிருந்து வெளியேறுவது எளிதாக உள்ளது.
இந்நிலையில், “சந்தை மேலும் மேலும் பெரிதாகி வருவதால் கவனமாகச் செயல்பட வேண்டியுள்ளது,” என்று தெமாசெக் நிறுவனத்தின் இந்தியச் செயலாக்கத்துக்கான தலைவர் ரவி லம்பா கூறினார்.
நிறுவனம் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இந்தியாவில் முதலீடு செய்துவருகிறது.
இந்த ஆண்டு (2025) அதன் இந்திய முதலீட்டு மதிப்பு 35 விழுக்காடு அதிகரித்து US$13 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.
மூலதன மதிப்பு உயர்ந்ததும் புதிய முதலீடுகளும் இதைச் சாத்தியமாக்கியுள்ளன.
கணிக்கக்கூடிய விதிமுறைகள், நிலையான பொருளியல் வளர்ச்சி, தொடர்ந்து முதலீட்டாளருக்குச் சாதகமாக அமையும் பங்குச் சந்தை போன்றவற்றால் தெமாசெக் நிறுவனம் இந்தியாவில் செய்த முதலீடுகள் வாயிலாகப் பல பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட முடிகிறது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், இந்தியச் சந்தை முதிர்ச்சியடைந்து வரும் நிலையில், நிறுவனம் அதன் உத்தியை மாற்றியமைக்க விரும்புகிறது. குறைவான கருப்பொருள்களில் மட்டும் கவனம் செலுத்த அது திட்டமிடுகிறது.
அத்துடன், கூடுதலான எண்ணிக்கையில் குடும்ப வர்த்தகங்களுடன் பங்காளித்துவ உடன்பாடு செய்துகொள்ளவும் தெமாசெக் விரும்புகிறது.