சிங்கப்பூர்ச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைப் பெண்களைக் கொண்டாடவும் மகளிர் மேன்மையைப் போற்றும் விதமாகவும் அமைந்த மகளிர் தின விழாவைத் தாரகை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்தது.
மார்ச் மாதம் 8ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சுகாதாரம், நடனம், கலை, சமூகச் சேவை எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள டாக்டர் உமா ராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
திருவாட்டி மஹ்ஜபீன் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கிய இவ்வமைப்பின் சார்பில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனுக்கு ‘தங்கப் பாவை’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
‘வரலாற்றில் மின்னும் வைர மங்கையர்’ எனும் தலைப்பில் சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த மகளிர் குறித்து ஆண்கள் உரையாற்றும் அங்கம் நடைபெற்றது.
இதில், லீ குவான் யூவின் துணைவியார் திருவாட்டி குவா குறித்து என்.ஆர். கோவிந்தன், திருவாட்டி ஆவுடை தனலட்சுமி குறித்து மா. அன்பழகன், திருவாட்டி எலிசபெத் கூ குறித்து முனைவர் வீரமணி, முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் குறித்து முனைவர் ரெத்தின வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றினர்.
சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணின் பல்வேறு பருவங்களை விளக்கும் முத்தமிழ் அங்கம் நடைபெற்றது. பங்கேற்பாளர்களிடையே பெருவரவேற்பைப் பெற்ற இந்த அங்கத்தைத் தாரகை இலக்கிய வட்டத்தின் துணைத்தலைவி இசக்கிசெல்வி வழிநடத்தினார். மகளிருக்காக நடத்தப்பட்ட காணொளிப் போட்டி, மாணவர்களுக்கான கடிதமெழுதும் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.