விமானம் தரையிறங்குவதற்குமுன் பயணிகளின் இருக்கை மேசையில் இருந்து உணவுத்தட்டுகள் அகற்றப்படாத சம்பவம் குறித்து தாய் ஏர்வேஸ் விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவம் சிங்கப்பூரிலிருந்து பேங்காக் சென்ற விமானத்தில் நடந்தது.
சம்பவம் குறித்து டிக்டாக் தளத்தில் கடந்த வெள்ளிகிழமை ஒரு காணொளி வெளியானது.
காணொளியில் மூன்று பயணிகளின் இருக்கை மேசையில் உணவுத்தட்டுகள் இருந்தன. விமானம் தரையிறங்கியபோது உணவுத்தட்டில் இருந்த ஒரு தண்ணீர் போத்தல் கீழே விழுந்தது.
விமானச் சிப்பந்தியிடம் அதுபற்றிக் கூறியும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் காணொளி பதிவேற்றம் செய்தவர் கவலை தெரிவித்தார்.
விமானம் தரையிறங்கியபோது உணவுத்தட்டுகளைத் தாம் கவனமாக பிடித்துக்கொண்டதாகவும் அவர் காணொளியில் குறிப்பிட்டார்.
காணொளி இதுவரை 5,700க்கும் மேற்பட்டமுறை பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தாய் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

