புறாக்களின் எச்சங்களால் சுவர்கள், தரைகள் அசுத்தமடைகின்றன. அவை பல பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன என்ற புகார்கள் எழுந்துள்ளன.
அமைதியான ஜூரோங் வெஸ்ட் வீடமைப்புப் பேட்டையின் கீழ் மாடிப் பகுதி, பச்சையும் வெள்ளையும் நிறைந்த எச்சங்கள் அங்கும் இங்குமாய் தெளிக்கப்பட்டு காட்சி தருகின்றது. அந்த அசிங்கத்தைப் புரிந்த குற்றவாளிகள், சுமார் 40க்கும் மேற்பட்ட புறாக்கள். பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் பதாகைக்கு இடையே அப்புறாக்கள் எதையும் பொருட்படுத்தாமல் தத்தம் செயல்களைத் தொடருவதையும் காண முடிந்தது.
கடந்த சில மாதங்களாகவே ஜாலான் காயூ, புக்கிட் பாஞ்சாங், செங்காங் போன்ற வீடமைப்புப் பகுதிகளில், மழை போன்று புறாக்களின் எச்சங்கள் விழுவதும், அசுத்தமான சுவர்களும், பறவைகள் எழுப்பும் சத்தமும் நீங்கா பிரச்சினையாகி, பல குடியிருப்பாளர்கள் புகார் செய்துள்ளனர்.
தேசிய பூங்காக் கழகம் வழங்கும் தகவல்கள் இந்தப் பிரச்சினைகள் குறைந்து சிறிய முன்னேற்றம் அடைந்துள்ளது என்று காட்டினாலும், பறவைகளுக்கு உணவு கொடுப்போர் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறைகூவல்கள் வைக்கப்படுகின்றன.
அதன் காரணம் புறாக்களுக்கு இயல்பாகவே உணவு கிடைக்கிறது என்று ஒரு பார்வை வைக்கப்பட்டுள்ளது. வீடமைப்புப் பேட்டைகளில் இயங்கும் உணவுக் கடைகளை அவை தேடிச்செல்வதும் வழக்கமாகிவிட்டது.
சிங்கப்பூரில் புதிதாக காணப்படும் ஜாவா மைனா இனம், ஒரு வகை காகங்கள் ஆகியன மனிதர்களை அச்சுறுத்தும் தன்மை வாய்ந்தவை. அவற்றால் சிங்கப்பூரின் இயற்கையான பல்லுயிரியல் நிலைத்தன்மை பாதிப்படைவதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 20 வரையில், தேசிய பூங்காக் கழகத்துக்கு 7,016 புறாக்கள் பற்றிய புகார்களும் பரிந்துரைகளும் கிடைத்துள்ளன. அவற்றில் 170 சம்பவங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒப்புநோக்க 2022ல் 23 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2021ல் 185 பேர் மீதும் 2020ல் 60 பேர் மீதும் பறவைகளுக்கு உணவு அளித்த குற்றத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கழகம் தெரிவித்துள்ளது.

