மருத்துவரின் ஆலோசனையின்றி ‘மொடாஃபினில்’ அல்லது ‘ஆர்மொடாஃபினில்’ மருந்தை உட்கொள்ளவேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
அந்த மருந்துகளை உட்கொண்ட மூன்று ஆடவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த எச்சரிக்கை வந்துள்ளது.
முப்பது வயது மதிக்கத்தக்க அந்த மூவரும் விழிப்புடன் இருப்பதற்காக அவற்றை உட்கொண்டனர். நண்பர்களிடமிருந்து அல்லது சட்டவிரோதக் கடைக்காரர்களிடமிருந்து அந்த மருந்துகளைப் பெற்ற அவர்களுக்குக் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்பட்டன.
சிங்கப்பூரில் அவ்விரண்டு மருந்துகளும் பதிவுசெய்யப்படவில்லை என்று ஆணையம் கூறியது. இருப்பினும், சில நாடுகளில் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு அவை கிடைக்கப்பெறும் என்றும் அது தெரிவித்தது.
அந்த மருந்துகள் இதயப் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், மனநலப் பிரச்சினைகள் போன்ற கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

