ஆயர் ராஜா விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதிய விபத்தைக் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை (மே 22) நிகழ்ந்த அந்த விபத்தில் மூன்று ஓட்டுநர்கள் விசாரணையில் உதவி வருகின்றனர்.
இதன் விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டு கேட்டபோது, விபத்து பற்றி பிற்பகல் 2.15 மணியளவில் தெரியவந்ததாகக் காவல்துறை கூறியது.
துவாசை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஒரு பேருந்து, ஒரு லாரி, இரண்டு சரக்குந்துகள் விபத்தில் சிக்கின.
சிங்கப்பூர் இன்சிடெண்ட்ஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியில் சாலையின் இடதுபுறத் தடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. ஒரு டிரக், அதைத் தொடர்ந்து லாரி, இரண்டாவது டிரக், கடைசியாக ஸ்டார்மார்ட் எக்ஸ்பிரஸ் பேருந்து என வரிசையாக நின்று கொண்டிருந்தன.
இது தொடர்பாக 61 வயது ஓட்டுநர், 42 வயது லாரி ஓட்டுநர், 43 வயது பேருந்து ஓட்டுநர் ஆகியோரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதில் யாரும் காயம் அடையவில்லை. மூவருக்கு சிறிய சிராய்புக் காயங்கள் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகள் கூறினர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்ல அவர்கள் மறுத்துவிட்டனர்.

