ஆசியாவில் உள்ள சதுப்பு நிலங்களையும் கடற்புல் வாழ்விடங்களையும் பாதுகாப்பதிலும் மீட்டெடுப்பதிலும் உள்ள தடைகளைச் சமாளிக்க சிங்கப்பூர் அமைப்பு ஒன்று, மூன்றாண்டுத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
வியாழக்கிழமை (ஜனவரி 15) தொடங்கப்பட்ட ‘புளூ கார்பன்’ ஆதரவுத் திட்டத்திற்குப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் உதவிக்கரம் நீட்டுகிறது.
இயற்கைவளத்துக்கான உலகளாவிய நிதியம் (WWF) என்னும் அந்த உள்ளூர் அமைப்பு, கடல் வட்டார சுற்றுச்சூழலில் சேமிக்கப்படும் கரிம அளவை மதிப்பிடுவதில் உள்ள பிரச்சினைகளைச் சமாளிக்கப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
கடலுக்குள் கைகெட்டா தொலைவில் இருக்கும் வாழ்விடங்களை அடையவும் நடப்பட்ட மரக்கன்றுகளின் ஆயுட்காலத்தை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுப்புநிலக் காடுகள் கடல் புல்வெளிகள், கடலோர ஈரநிலங்கள் போன்றவை நிலத்தில் உள்ள காடுகளைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாகக் கரிமத்தைச் சேமிக்கக்கூடியவை.
கரிம வர்த்தகம் மூலம் சிங்கப்பூர்ப் பொருளியலுக்கு உதவக்கூடிய கடல்துறை கரிமத்தை உருவாக்குவதன் மீது ஏற்கெனவே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கடல்துறையில் பாதுகாக்கப்படும் கரிமமே ‘புளூ கார்பன்’ என்று அழைக்கப்படுகிறது.
‘புளூ கார்பன்’ வர்த்தகம் இரு நோக்கங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்றக்கூடியது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதோடு, இயற்கை நிறைந்த சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கங்களை அது நிறைவேற்றுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சுற்றுச்சூழல் மீள்திறன், சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் கடல்துறையில் பாதுகாக்கப்படும் கரிமம் (புளூ கார்பன்) போன்றவை அவை.
தென்கிழக்கு ஆசியா, கடந்த 40 ஆண்டுகளில் தனது சதுப்புநிலக் காடுகளில் 30 விழுக்காட்டை இழந்துவிட்டது. அவற்றை மீட்டெடுப்பது எளிதன்று.
அதுகுறித்து இயற்கைவளத்துக்கான உலகளாவிய நிதியத்தைக் கரிம நிதி மற்றும் சந்தைச் செயற்குழுவின் உலகளாவிய தலைவர் ரூபன் மனோகரா விளக்கினார்.
“நடப்பில் உள்ள சதுப்புநிலப் பாதுகாப்புத் திட்டங்கள் எளிதில் தோல்வியடையக் கூடியனவாக உள்ளன.
“மோசமான திட்ட வடிவமைப்பு காரணமாகவும் போதுமான அளவீடு இல்லாததாலும் உலக அளவில் 50 விழுக்காட்டுத் திட்டங்கள் தோல்வியில் முடிகின்றன,” என்றார் அவர்.
“கடல்துறை வாழ்விடங்களில் சேமிக்கப்படும் கரிமத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதும் காலப்போக்கில் மீட்புத் திட்டம் வாயிலாக எவ்வளவு கரிமம் பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்காணிப்பதும் அடுத்தகட்ட சவால்கள்,” என்றும் திரு மனோகரா கூறினார்.

