செப்டம்பர் இறுதிவரை அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமத்ரா புயல் காரணமாக, அடுத்த இரு வாரங்களுக்கு விடியற்காலை மற்றும் காலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதுடன் பலத்த காற்று வீசும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
சில நாள்களில் மதிய வேளைகளில், தீவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை குறுகிய நேரம் பெய்யும் என்றும் சில நாள்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியது.
ஒட்டுமொத்தமாக, அடுத்த இரு வாரங்களுக்கு மொத்த மழைப்பொழிவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாள்களில் அன்றாட வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சில நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கு சற்று அதிகமாகவும் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.