சிங்கப்பூர் முழுவதும் அக்டோபர் மாதம் இரண்டாம் பாதியில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் நேரங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம் என்று அது முன்னுரைத்துள்ளது. அதேபோல் சில நாள்களில் வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமத்ரா புயல் காரணமாக அடுத்த இரு வாரங்களுக்கு விடியற்காலை மற்றும் காலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதுடன் பலத்த காற்று வீசும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை (அக்டோபர்16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஒட்டுமொத்தமாக, அடுத்த இரு வாரங்களுக்கு மொத்த மழைப்பொழிவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விடச் சற்று அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாள்களில் அன்றாட வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருக்கும்.
சில நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கு சற்று அதிகமாகவும் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.