துவாசை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.
வியாழக்கிழமை நடந்த விபத்து குறித்து எங்களுக்குக் காலை 10 மணிக்குத் தகவல் கிடைத்தது எனவும் இந்த விபத்தில் இரண்டு கனரக லாரிகளும் இரண்டு வேன்களும் ஒரு டாக்சியும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின எனவும் காவல்துறை தெரிவித்தது.
இவ்விபத்து குறித்து டிக்டாக் பயனர் ஒருவர் பகிர்ந்தக் காணொளியில், ‘சிமெண்ட்’ போன்றதொரு கலவை, நான்கு வாகனங்கள்மீதும் விரைவுச்சாலையின் மூன்று வழித்தடங்களிலும் கொட்டியிருந்ததைக் காண முடிந்தது.
விபத்துக்குள்ளான வேன் ஒன்றின் ஓட்டுநரான 35 வயது மாதும் அதில் பயணம் செய்த 39 வயது ஆடவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
விபத்து குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

