கிழிந்திருந்த தேசியக் கொடி; அவமதிப்புச் செயல் என்ற ஆடவர்

கிழிந்திருந்த தேசியக் கொடி; அவமதிப்புச் செயல் என்ற ஆடவர்

1 mins read
133e3891-630a-4b88-802f-e5e9ccc75c60
ஹவ்காங்கில் பறக்கவிடப்பட்டதாக நம்பப்படும் தேசியக் கொடி. - காணொளிப் படம்: ரேஸ் / ஸ்டோம்ப்
Google News Preferred Icon

ஹவ்காங் வட்டாரத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டின் சன்னலுக்கு வெளியே பறக்கவிடப்பட்ட சிங்கப்பூர் தேசியக் கொடி கிழிந்திருந்தது.

அது அவமதிப்புச் செயல் என்று ஆடவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ரேஸ் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஆடவர் இம்மாதம் 23ஆம் தேதி வண்ணம் தேய்ந்த அந்தக் கொடியை ஹவ்காங் ஸ்திரீட் 12ல் உள்ள புளோக் 178Bக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்ததாக ஸ்டோம்ப் ஊடகம் தெரிவித்தது.

மஞ்சள் நிறச் சுவருக்கு முன்னால் பறக்கவிடப்பட்ட அந்த தேசியக் கொடி பதிவான காணொளியை ரேஸ் இணையத்தில் பகிர்ந்துகொண்டார்.

“தேசிய தினம் நெருங்கும் வேளையில் இச்செயல் சிங்கப்பூர் கொடியை வெளிக்காட்டுவதற்கான விதிமுறைகளைப் பூர்த்திசெய்கிறதா என்று தெரிந்துகொள்ள முனைகிறேன்,” என்று ரேஸ் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை நீடிக்கும் தேசிய தினக் கொண்டாட்டக் காலகட்டத்தில் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு எல்லா அமைப்புகளையும் வீடுகளையும் ஊக்குவிக்கிறது. எனினும், தேசியக் கொடி மரியாதையுடன் நடத்தப்படவேண்டும் என்றும் தேய்ந்துபோன அல்லது சேதமடைந்த கொடியைப் பறக்கவிடவேண்டாம் என்றம் அமைச்சு கேட்டுக்கொண்டது.

தேசிய மரபுடைமைக் கழகத்தின் விதிமுறைகளின்படி தேய்ந்திருந்தோலோ கிழிந்திருந்தாலோ தேசியக் கொடி மாற்றப்படவேண்டும். சேதமடைந்த அல்லது அழுக்குபடிந்த தேசியக் கொடியைத் தெரிந்தே பறக்கவிடுபவருக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்