டோட்டோவில் S$136,132 வென்ற மாது ஒருவர், சைனாடவுன் பீப்பீள்ஸ் பார்க் சென்டரில் உள்ள எரவான் ஆலயத்தில் நடனங்களை ஏற்பாடு செய்து மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து பாரம்பரிய உடை அணிந்த நடனமணிகள் பத்து நிமிட நேரம் நடனமாடி கடவுளுக்கு நன்றி தெரிவித்தனர்.
பீப்பிள்ஸ் பார்க் சென்டரில் தரைத் தளத்தில் உள்ள அந்த ஆலயத்துக்கு சென்ற பிறகு அவருக்கு ஜனவரி 3ஆம் தேதி ‘குருப் 2’ பிரிவில் டோடோவில் S$136,132 கிடைத்தது.
அந்தத் தொகைக்கான சிங்கப்பூர் பூல்ஸ் வழங்கிய காசோலையின் புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
சைனாடவுன் எரவான் ஆலயத்தில் நான்குமுகப் புத்தரைப் பார்த்த பிறகு டோட்டோ வாங்க வேண்டும் என யோசனை தோன்றியதாக சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே கட்டடத்தில் முதல் தளத்தில் உள்ள டோட்டோ கடைக்குச் சென்ற அவர் பத்து வெள்ளிக்கு டோடோ வாங்கியுள்ளார்.
“இதற்கு முன்பு தாய்லாந்துக்குச் சென்ற நான் அங்குள்ள நான்முக புத்தரை வணங்கினேன். டோடோ வென்றது பெரும் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இதே போன்று மற்றவர்களும் டோடோவில் வென்றதைப் பார்த்திருக்கிறேன்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் நான்முக புத்தர் ஆலயங்கள் பல இருக்கின்றன. கோல்டன் மைல் காம்ப்ளக்ஸிலிருந்து ரேஸ் கோர்ஸ் ரோடு செல்லும் பாதையில் உள்ள பௌத்த ஆலயமும் அவற்றில் ஒன்று.