தீவு விரைவுச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஜனவரி 6ஆம் தேதி இழுவை வண்டி மோதிய சம்பவம் தொடர்பில் 40 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4.5 மீட்டருக்குமேல் உயரங்கொண்ட பொருளை ஏற்றிச்சென்ற அந்த இழுவை வண்டி (trailer) மேம்பாலத்தின் உட்புறத்தில் மோதியதைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜிலான்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
பச்சை நிறத்திலுள்ள அந்த வாகனம், ஆரஞ்சு நிற இரும்புச் சட்டம் போன்ற ஒன்றை ஏற்றிக்கொண்டு விரைவுச்சாலையில் செல்வதை அந்தக் காணொளி காட்டுகிறது.
மேம்பாலத்தை நெருங்கியபோது அந்த இரும்புச் சட்டம் பாலத்தின் உட்புறத்தில் மோதுவதையும் அதனால் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த அச்சட்டம் சற்று விலகுவதையும் அதில் காணமுடிகிறது.
அதன் பின்னர், இழுவை வண்டி சாலையின் ஒருபக்கத்தில் நிற்பதைக் காணொளி காட்டுகிறது.
இது குறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த காவல்துறை, சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் மாலை 5.25 மணியளவில் இவ்விபத்து நடந்ததாகத் தகவல் கிடைத்தது என்று கூறியது.
காவல்துறை அல்லது துணைக் காவல்படை அதிகாரி ஒருவரின் பாதுகாப்பு வழிநடத்தலின்றி, 4.5 மீட்டருக்கும் அதிகமான உயரங்கொண்ட பொருளுடன் கனரக வாகனத்தை ஓட்டிச் சென்றதற்காக அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.