டௌன்டவுன் ரயில் பாதையில் புக்கிட் பாஞ்சாங் நிலையத்திற்கும் பியூட்டி வோர்ல்டு நிலையத்துக்கும் இடையே ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் அறிவித்து உள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த இரு எம்ஆர்டி நிலையங்களுக்கும் இடையிலான ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் அது இன்று (ஆகஸ்ட் 28) காலை 8.10 மணியளவில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
முன்னதாக, சமிக்ஞை கோளாறு காரணமாக அந்த இரு நிலையங்களுக்கும் இடையே சேவைத் தடங்கல் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவச இணைப்புப் பேருந்து சேவை தொடங்கப்பட்டதாகவும் சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் காலை 6.34 மணிக்கு எஸ்பிஎஸ் தனது பதிவில் தெரிவித்து இருந்தது.
டெளன்டவுன் ரயில் பாதையில் புக்கிட் பாஞ்சாங், பியூட்டி வோர்ல்டு நிலையங்களுக்கு இடையில் கேஷ்யூ, ஹில்வியூ, ஹியூம் ஆகிய மூன்று நிலையங்கள் உள்ளன.
பின்னர் காலை 6.55 மணியளவில் வெளியிட்ட பதிவில், புக்கிட் பாஞ்சாங் நிலையம் வரையிலான கோளாறு கண்டறியப்பட்டு வரும் வேளையில், பியூட்டி வோர்ல்டு மற்றும் எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையிலான சேவை வழக்கம்போல தொடர்வதாக அது குறிப்பிட்டது.
அடுத்த பதிவில், கோளாறு கண்டறியப்பட்டு காலை 7.22 மணிக்கு சரிசெய்யப்பட்டதாகவும் அந்தப் போக்குவரத்து நிறுவனம் கூறியது.
காலை 7.50 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் எம்ஆர்டி நிலையத்தை தமிழ் முரசு செய்தியாளர் அடைந்தபோது அங்கு பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லை.
ரயில் சேவை முழுமையாக மீண்டுவிட்டதால் சேவைத் தடங்கல் குறித்த அறிவிப்புகளும் நீக்கப்பட்டுவிட்டதை செய்தியாளர் அங்கு கண்டார்.
தொடர்புடைய செய்திகள்
ரயில் சேவை முழுமையாக மீண்டுவிட்டதால் இலவச இணைப்புப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாகக் காலை 8.10 மணியளவில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது.
திடீர் சமிக்ஞை கோளாற்றால் காலையில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் சேவைத் தடங்கல் ஏற்பட்டது.
இந்த மாதத்தில் நிகழ்ந்திருக்கும் நான்காவது ரயில் சேவைத் தடங்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது.