புக்கிட் பாஞ்சாங் இலகு ரயிலில் ஏற்பட்ட அண்மைய சேவைத் தடங்கலுக்கு புதிதாகப் பொருத்தப்பட்ட கட்டமைப்பு காரணம் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தக் கட்டமைப்பு மின்சார விநியோகத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறது.
பவர் ஸ்காடா (Power SCADA) என்று அழைக்கப்படும் அந்தக் கட்டமைப்பு நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மின்சாரப் புதுபிப்புத் திட்டத்தின் ஓர் அங்கம்.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதையில் மின்சார விநியோகத்தைத் தொலைவில் இருந்து கண்காணித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பையும் நம்பகதன்மையையும் மேம்படுத்த கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 13ஆம் தேதி ஏற்பட்ட சேவைத் தடங்கலுக்கான காரணமும் சனிக்கிழமை ஏற்பட்ட சேவைத் தடங்கலுக்கான காரணமும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை என்று ஞாயிறு மாலை சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பவர் ஸ்காடா கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சனிக்கிழமை அன்று அவரசப் பயணக் கட்டமைப்பைப் பாதித்தது. அது முழு ரயில் பாதையின் மின்சார விநியோகத்தைப் பாதித்தது.
எஸ்எம்ஆர்டி, நிலப் போக்குவரத்து ஆணைய மின்சாரப் புதுப்பிப்புத் திட்டக் குழு, ஷினய்டர் இலெக்டிரிக் (Schneider Electric) ஆகிய ஒன்றிணைந்து சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்டன.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ஏற்பட்ட கோளாற்றால் புக்கிட் பாஞ்சாங் ரயில் பாதையில் உள்ள அனைத்து நிலையங்களிலும் ரயில் சேவைகள் நின்றன. அவற்றுள் நான்கு ரயில்கள் மின்சாரத் துண்டிப்பால் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டன.
“ரயில் சேவையைப் பாதுகாப்பாக மீண்டும் தொடங்கும் வழிகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தலைவர் திரு லாம் ஷியூ காய்.
தொடர்புடைய செய்திகள்
நிலப் போக்குவரத்து ஆணையம் தீவிரமான சோதனைகளை நடத்துகிறது என்றார் அவர்.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் மின்சாரப் புதுப்பிப்புத் திட்டம் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற திரு லாம், எஸ்எம்ஆர்டி நிறுவனம் கட்டமைப்பைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று குறிப்பிட்டார்.