சமூக சேவை நிலையத்தில் பணியாற்றிய பயிற்சி அதிகாரி ஒருவர், தமது மேற்பார்வையில் இருந்த சிறப்புத் தேவையுடைய மாது ஒருவர் நிபந்தனைப்படி நடந்துகொள்ளத் தவறியதால், அவரைக் கோபத்தில் தள்ளிவிட்டார்.
கீழே விழுந்த அந்த சிறப்புத் தேவையுடைய மாதின் இடது முட்டியில் முறிவு ஏற்பட்டு வலி மிகுதியால் அவரால் சொந்தமாக நிற்கவோ நடக்கவோ முடியவில்லை.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நூர் அமிரா ஷஹிரா அஸ்மி என்ற அந்த 21 வயது பயிற்சி அதிகாரிமீது வேண்டுமென்றே ஒருவரைக் காயப்படுத்திய குற்றம் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி அவருக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால் அவர் மீண்டும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும்.
காயமடைந்த அந்த சிறப்புத் தேவையுடையவரின் விவரங்களையும் சம்பவம் நடந்த நிலையம் பற்றியும் தகவல் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த சிறப்புத் தேவையுடைய மாதுக்கு 2015ல் அறிவுசார் குறைபாடு இருப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றச் சம்பவம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நடந்துள்ளது. பாதிப்படைந்த மாது மற்றொருவருடன் ஓர் அறையில் அமர்ந்தபடி உணவுக்குக் காத்திருந்தபோது சம்பவம் நடந்ததாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.

