சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 2) கனமழை பெய்தது.
இந்நிலையில், லெவெண்டர் ஸ்திரீட்டில் சென்றுகொண்டிருந்த கார்மீது சாலையோரம் இருந்த ஆங்சானா மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.
இதுகுறித்து நண்பகல் 12 மணி அளவில் தேசிய பூங்காக் கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சாலையில் விழுந்த கிளை பிற்பகல் 1 மணியளவில் அகற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து உதவி கேட்டு அழைப்பு கிடைக்கவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்ட வெள்ளை நிற கார் மீது மரக்கிளையும் இலைகளும் இருப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
காருக்குச் சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

