ஆர்ச்சர்ட் பகுதியில் புதன்கிழமை காலை பெய்த கனமழையால் மரம் ஒன்று கார்மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தியது. இதனால் மத்திய விரைவுச்சாலை சுரங்கப்பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படத்தில் வெள்ளை நிறக் காரின்மீது மரம் ஒன்று விழுந்திருப்பதைக் காண முடிந்தது. அந்தச் சுரங்கப்பாதையின் மூன்று வழித்தடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ச்சர்ட் சாலை வெளிவழிக்கு முன்னதாக இருக்கும் மத்திய விரைவுச்சாலை சுரங்கப்பாதை விபத்தின் காரணமாகத் தற்காலிகமாக மூடப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தது.
அந்த சுரங்கப்பாதையின் மூன்று வழித்தடங்களும் காலை 10.30 மணிவரை மூடப்பட்டிருந்தன. பின்னர், முதலிரு வழித்தடங்கள் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டன. மூன்றாவது வழித்தடம் மட்டும் மூடப்பட்டிருந்தது.