முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனை 2023ஆம் ஆண்டு ஜூலையில் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கைது செய்தது. இதையடுத்து, ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு செப்டம்பர் 24ஆம் தேதி அன்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக திரு ஈஸ்வரன் நீதிமன்றத்திற்கு வரவிருக்கிறார். அவர் மீது 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நாள்களில் முதல் பகுதி செப்டம்பர் 27 வரை நடைபெறும். அடுத்தடுத்த விசாரணை நவம்பரிலும் பின்னர் ஜனவரியிலிருந்து மார்ச் 2025 வரையிலும் நடைபெறும்.
திரு ஈஸ்வரன், 62, சிங்கப்பூரில் ஐம்பது ஆண்டுகளில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் அரசியல் பிரமுகர் ஆவார்.
ஹோட்டல் தொழிலதிபரும் சிங்கப்பூரில் ஃபார்முலா ஒன் (F1) கார்ப் பந்தயப் போட்டி நடப்பதற்கு முக்கிய காரணமான ஓங் பெங் செங், லும் சாங் ஹோல்டிங்ஸ் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டேவிட் லும் ஆகியோரிடமிருந்து 400,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள பொருள்களை திரு ஈஸ்வரன் பெற்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
‘எஃப்1’ கார்ப் பந்தயங்கள், காற்பந்துப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கான நுழைவுச் சீட்டுகளை திரு ஓங்கிடமிருந்து திரு ஈஸ்வரன் பெற்றதாகக் கூறப்படுவதும் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
ஆனால் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனின் வழக்கறிஞர்கள், அவையெல்லாம் திரு ஈஸ்வரனின் நெருங்கிய நண்பர்களால் வழங்கப்பட்ட பரிசு பொருள்கள் என்று கூறியுள்ளனர்.