தெம்பனிசில் கடந்த வார இறுதியில் ஒரே சாலைச் சந்திப்புக்கு அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காகச் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
முதல் விபத்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 8.40 மணியளவில் தெம்பனிஸ் ஸ்திரீட் 84, தெம்பனிஸ் ஸ்திரீட் 85 ஆகியவற்றுக்கு இடையிலான சாலைச் சந்திப்பில் நிகழ்ந்ததாகக் காவல்துறை கூறியது.
மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவத்தில், 60 வயது ஆண் ஓட்டுநரும் அவருடன் பயணம் செய்த 33 வயதுப் பெண்ணும் சுயநினைவோடு சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்துக் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) பிற்பகல் 2.40 மணியளவில் தெம்பனிஸ் ஸ்திரீட் 85 - தெம்பனிஸ் அவென்யூ 8 சந்திப்பில் இரண்டு கார்கள் மோதி, மற்றொரு விபத்து நேர்ந்தது. சம்பவத்தில் இருவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 53 வயதுப் பெண் ஓட்டுநர் காவல்துறை விசாரணைக்கு உதவிவருகிறார்.
இவ்விரு விபத்துகள் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. இரு விபத்துகள் குறித்தும் விசாரணை தொடர்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது.


