வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மேல்தளத்திலிருந்து மிதிவண்டியையும் செங்கல் வடிவிலான பொருள் ஒன்றையும் தூக்கி எறிந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு பிள்ளைகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், அந்தச் சிறுவன் கைப்பிடிச் சுவருக்கு அருகிலிருந்து அப்பொருளை வீசுவதையும் அதை ஒரு சிறுமி பார்த்துக்கொண்டு இருந்ததையும் காண முடிந்தது.
அதனைத் தொடர்ந்து, அவன் குழந்தைகளுக்கான மிதிவண்டி ஒன்றைத் தூக்கி எறிந்தான்.
இதன் தொடர்பில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை தொடர்வதாகவும் காவல்துறைப் பேச்சாளர் கூறினார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மணி 1.36க்கு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. புளோக் 244, அங் மோ கியோ அவென்யூ 1, சம்பவ இடமாகக் காணொளியில் குறிப்பிடப்பட்டது. காணொளியில் காணப்பட்ட மிதிவண்டியின் சொந்தக்காரர்களிடம் அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. அவர்கள் இழப்பீடு வழங்கப்போவதாகவும் கூறப்படுகிறது. தனது மிதிவண்டி சேதமடைந்த நிலையில் கீழே இருந்ததைக் கண்ட அந்த உரிமையாளர் தனது கண்காணிப்புக் கருவியில் உள்ள காணொளியைப் பார்த்தார். அவர் அந்தக் காணொளியை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடிவெடுத்தார்.
அந்த புளோக் அமைந்துள்ள இடத்தை நிர்வகிக்கும் அங் மோ கியோ நகர மன்றத்தின் பேச்சாளர், சம்பவம் குறித்து நகர மன்றம் அறிந்திருப்பதாகவும் சேதமடைந்த மிதிவண்டியைத் துப்புரவாளர்கள் அகற்றிவிட்டதாகவும் சொன்னார்.