கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் அண்டை வீட்டார்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 22ஆம் தேதி புளோக் 805 கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் இரு முதியவர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களுக்கு இடையிலான சிறிய சச்சரவு பின்னர் சண்டையாக மாறியது.
அண்டை வீட்டுக்காரரான எழுபது வயதுகளில் உள்ள முன்னாள் துப்புரவாளர் திருமதி கூ, சத்தத்தில் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டதாகக் கூறினார்.
“வெளிக்கதவை திறப்பதற்கே அச்சமாக இருந்தது. கணவர் வரும் வரை காத்திருந்தேன்,” என்று அவர் கூறினார்.
வீடு திரும்பிய அவரது கணவர், முதல் தளத்திலிருந்து எட்டாவது மாடி வரை ரத்தக் கறை இருந்ததாகக் கூறினார்.
“இரு முதியவர்களுக்கும் முதலுதவி வழங்கப்பட்டது. இருவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார்,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
“காயம் அடைந்த 69 வயது முதியவர் சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்,” என்று காவல்துறையும் தெரிவித்தது.
அபாயகரமான முறையில் வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காக 71 முதியவர் கைது செய்யப்பட்டதாகவும் அது கூறியது.
இருவரும் எட்டாவது மாடியில் வசித்தனர் என்று அண்டை வீட்டார்கள் தெரிவித்தனர். இளையர் வேலை எதுவும் செய்யவில்லை. பெரியவர், கார்ப்பேட்டையில் பாதுகாவலராகப் பணியாற்றுகிறார் என்று அவர்கள் கூறினர்.


