துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் மூன்று வாகனங்கள் சிக்கிய விபத்தில் இரண்டு வாகனங்கள் கால்வாயில் சாய்ந்தன.
இந்த விபத்து சனிக்கிழமை (ஜூன் 27) பிற்பகல் 2.25 மணியளவில் நிகழ்ந்தது.
ஒரு சிமெண்ட் கலவை வாகனம், ஒரு டிரக், ஒரு கார் ஆகியவை விபத்தில் சிக்கின.
கால்வாயில் சாய்ந்த வாகனங்களை தூக்குவதற்காக பளுதூக்கி வரவழைக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படங்களிலும் காணொளிகளிலும் சிமெண்ட் லாரியும் டிரக்கும் சாலையின் நடுவே உள்ள தடுப்புப் பள்ளத்திற்குள் சரிந்து கிடப்பதைக் காண முடிந்தது.
இதில் சிமெண்ட் லாரியின் முன்பகுதி சாங்கி நோக்கிச் செல்லும் மறுபுறம் சாலை வரை நீட்டிக் கொண்டிருந்ததால் அந்தப் பக்கத்தில் உள்ள நான்கு தடங்களில் ஒன்று மூடப்பட்டது. அதே நேரத்தில் துவாஸ் நோக்கிச் செல்லும் பாதையில் வாகனங்களை பளுதூக்கி மூலம் தூக்குவதற்காக மற்றொரு தடமும் மூடப்பட்டது.
வழக்கமாகக் கனரக வாகனங்கள் சாலையின் இடதுபுறத் தடத்தில் செல்ல வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு வாகனங்களும் வலதுபுறத் தடத்துக்கு எப்படி வந்தன என்பது தெரியவில்லை. முந்திச் செல்லும்போது அல்லது ஏதேனும் இடையூறுகள் இருந்தால் மட்டுமே கனரக வாகனங்கள் மற்ற தடங்களைப் பயன்படுத்த அனுமதியுண்டு.
இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று கூறிய காவல்துறை, விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தி வருகிறது.

