சிங்கப்பூர் நகைக்கடையில் $235,000 மதிப்புள்ள வைரம் திருட்டு; இருவர் கைது

சிங்கப்பூர் நகைக்கடையில் $235,000 மதிப்புள்ள வைரம் திருட்டு; இருவர் கைது

1 mins read
f80fe152-de30-4efb-b20e-740028121739
ஆடவர் இருவரும் சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கைது செய்யப்பட்டனர். களவுபோன வைரம் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

சிங்கப்பூரில் $235,000க்கும் மேல் மதிப்புள்ள வைரத்தைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படுவதன் தொடர்பில், ஆடவர் இருவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு வயது 30, இன்னொருவர்க்கு 42.

காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. சைனாடவுன் வட்டாரத்தில், கிரேத்தா ஆயர் ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையிலிருந்து வைரம் திருடப்பட்டதாகக் கூறப்பட்டது. அதுகுறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் மணி 3:40க்கு உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

கண்காணிப்புப் படக்கருவி, ஒளிப்பதிவுப் படங்கள், தொடர் விசாரணைகள் மூலம் மத்திய காவல்துறைப் பிரிவும் காவல்துறைச் செயல்பாட்டுத் தளபத்திய நிலையமும் ஆடவர் இருவரையும் அடையாளம் கண்டன.

பின்னர் இருவரும் சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். களவுபோன வைரம் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

அவர்கள் இருவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்