சாங்கி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய வெளிநாட்டு ஆடவர்கள் இருவர் $20,000க்குமேல் மதிப்புள்ள சிங்கப்பூர், வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவந்ததற்காக விசாரிக்கப்படுகின்றனர்.
பொய்யான தகவல்களைத் தந்தது தொடர்பிலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
39 மற்றும் 53 வயதான அவ்விருவரும், பல்வேறு நாடுகளின் பணத்தை சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தனர். அதன் மொத்த மதிப்பு $1.2 மில்லியன். அதில் $120,000 அறிவிக்கப்படாத தொகை என்று தெரிவிக்கப்பட்டது.
வேறொரு சம்பவத்தில், 37 மற்றும் 48 வயதான இருவர் $20,000க்குமேல் மதிப்புள்ள வெவ்வேறு நாடுகளின் பணத்தை சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தனர். அவை அனைத்தும் அறிவிக்கப்படாதவை. இது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
காவல்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகியவை இணைந்து நவம்பர் 16ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் நடத்திய அமலாக்க நடவடிக்கையின்போது அந்த நான்கு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.
நவம்பர் 24ஆம் தேதி காவல்துறையும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
இந்த அமலாக்க நடவடிக்கை, செப்டம்பர் முதல் பல்வேறு குடிநுழைவு சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட தொடர் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கப்பட்டது.
$20,000 அல்லது அதற்குமேல் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவரும்போதும் இங்கிருந்து வெளியே கொண்டுசெல்லும்போதும் பயணிகள் அதுகுறித்து தகவல் அளிக்கவேண்டும்.
அவ்வாறு செய்யத்தவறினால், $50,000 வரையிலான அபராதமோ மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.