தாமான் ஜூரோங்கிலும் சுவா சூ காங்கிலும் பாதசாரிகளுக்கு உகந்த தெருக்களை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சாலை மறுவடிவமைப்புத் திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன.
தாமான் ஜூரோங் பேரங்காடி நிலையம், தாமான் ஜூரோங் சந்தை, உணவு நிலையம் ஆகியவற்றுக்கு இடையே யுங் ஷெங் சாலையில் 18 மீட்டர் நீளமான பாதை பாதசாரிகளுக்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளது எனப் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் கூறினார்.
பேரங்காடி நிலையத்துக்கும் உணவு நிலையத்துக்கும் இடையே கூரையுள்ள இணைப்புப் பாதை பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, குடியிருப்பாளர்கள் ஓய்வெடுப்பதற்கும் தங்கள் அண்டைவீட்டாருடன் உரையாடுவதற்கும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
சூவா சூ காங் டெரசில், ‘சன்ஷைன் பிளேசுக்கு’ அருகில் 80 மீட்டர் நீளமான பாதை பாதசாரிகளுக்கு உகந்த இடமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் டாக்டர் கோர் கூறினார்.
குடியிருப்பாளர்கள் பேரங்காடிக்கு எளிதில் நடந்துசெல்லவோ, மிதிவண்டியில் செல்லவோ கூரையுள்ள இணைப்புப் பாதை, சைக்கிளோட்டப் பாதைகள், நடைபாதைகள் ஆகியவை அங்கு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதோடு, பொழுதுபோக்குச் சமூக நடவடிக்கைகளுக்கு அங்கு மண்டபம் (hard court) உள்ளதையும் அவர் சுட்டினார்.
இரண்டு திட்டங்களும் சென்ற ஆண்டு டிசம்பரில் நிறைவுபெற்றன.