பிரான்சில் நடக்கும் அனைத்துலகத் திறன் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதிமுதல் செப்டம்பர் 15ஆம் தேதிவரை நடந்தது. அதில் 35 சிங்கப்பூர் இளையர்கள் 30 திறன் பிரிவுகளில் போட்டியிட்டனர்.
அந்த 35 பேரில் 33 பேர் பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தைப் பிரதிநிதித்தார்கள்.
எஞ்சிய இருவரும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தைப் பிரதிநிதித்தார்கள். அவர்கள் ரயில் வாகன தொழில்நுட்பத்திற்கானப் பிரிவில் பங்கேற்றனர்.
22 வயது முகம்மது இஸ்சுதின் ஸைனுதீனும் முகம்மது ரேடி முகம்மது சானியும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சி தருவதாகத் தெரிவித்தனர்.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள நிறுவனத்தில் அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. அதில் பலர் பங்கேற்றனர். இறுதியில் ஸைனுதீனும் ரேடியும் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் பிரான்ஸ் செல்ல தேர்வு செய்யப்பட்டதாக எஸ்பிஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜெஃப்ரி சிம் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் கிடைக்கும் அனுபவம், 2026ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் அனைத்துலகத் திறன் போட்டிக்கு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

