எம்பிளாய்மண்ட்-பாஸ் விண்ணப்பங்களில் புள்ளிகள் அடிப்படையிலான கட்டமைப்பு 2023 செப்டம்பரில் நடைமுறைக்கு வந்த்தைத் தொடர்ந்து, இங்குள்ள பிரிட்டிஷ் நிறுவனங்கள் கூடுதலான உள்ளூர்வாசிகளைப் பணியமர்த்தி வருவது புதியதோர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Complementarity Assessment (Compass) கட்டமைப்பு நடப்புக்கு வந்ததையடுத்து, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 50ல் 26 விழுக்காட்டு நிறுவனங்கள் கூடுதலான உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு எடுத்ததாகக் கண்டறியப்பட்டது.
சிங்கப்பூர் பிரிட்டிஷ் வர்த்தக சபை 2024 செப்டம்பரில் நடத்திய அந்த ஆய்வில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை பங்கெடுத்தன.
கடந்த ஆறு மாதங்களாக மொத்த ஊழியரணி பங்கேற்பாளர் அளவு 18 விழுக்காடு கூடியதை வர்த்தக சபை கண்டறிந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் 69 விழுக்காடு பங்கு வகிக்கின்றனர்.
இதற்கிடையே, இந்த நிறுவனங்களில் வேலை செய்ய ஒருவித எம்பிளாய்மண்ட்-பாஸ் தேவைப்படும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 4 விழுக்காடு குறைந்தது. ஒப்புநோக்க, 2023 ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இதற்கு முந்தைய ஆய்வில், இந்த எண்ணிக்கை 5 விழுக்காடு கூடியிருந்தது.
ஆய்வில் பங்கெடுத்த 94 விழுக்காட்டு நிறுவனங்கள், வர்த்தக மையமாக சிங்கப்பூரின் நீண்டகால எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டிருந்ததை வர்த்தக சபை கண்டறிந்தது.


