நிச்சயமற்ற உலகில் சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்: மூத்த அமைச்சர் லீ

நிச்சயமற்ற உலகில் சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்: மூத்த அமைச்சர் லீ

2 mins read
64c04568-fd7b-4238-95f3-75c4954158c0
7.5 கிலோமீட்டர் தூரச் சமூக நடையோட்டத்தில் பங்கேற்ற 200 அங் மோ கியோ, ஹவ்காங் குடியிருப்பாளர்களிடம் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

நிச்சயமற்ற உலகில் பல்வேறு பிரச்சினைகள் நிலவினாலும், அரசாங்கம் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் எப்போதும் செய்யும் என்றும் மக்கள் தங்களுக்கும் பிறருக்கும் உதவிக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் ஊக்கப்படுத்தினார்.

அங் மோ கியோ குழுத்தொகுதியில் 14 குடியிருப்பாளர் கட்டமைப்பு நிலையங்களைக் கடந்து சென்ற 7.5 கிலோமீட்டர் தூரச் சமூக நடையோட்டத்தில் பங்கேற்ற 200 அங் மோ கியோ, ஹவ்காங் குடியிருப்பாளர்களிடம் மூத்த அமைச்சர் லீ ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) உரையாற்றினார்.

‘கோ கனெக்ட்’ என்று அழைக்கப்படும் இந்நடைப்பயிற்சி, சி யுவான் சமூக மன்றம் நடத்திய ஆண்டு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும். இதில் பங்கேற்ற பெரும்பாலான குடியிருப்பாளர்கள் 60 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள்.

மாண்டரின், ஆங்கில மொழிகளில் பேசிய மூத்த அமைச்சர் லீ, இந்நிகழ்ச்சி உடற்பயிற்சியை ஊக்குவிப்பது மட்டுமன்றி, பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு சமூகப் பிணைப்பை ஏற்படுத்த உதவுவதாகவும் கூறினார்.

அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட்டும் இதில் கலந்துகொண்டார். அனைவரும் எளிதில் அணுகும் வகையிலும் பரந்த அளவிலும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யத் தாங்கள் முயன்றுள்ளதாக அவர் கூறினார்.

‘அன்பான, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தைக் கொண்டாடுவோம்’ என்ற கருப்பொருளில் சி யுவான் சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

உடற்குறையுள்ளோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மங்கலான பார்வைக் கண்ணாடியை அணிந்து உணவுப் பொருள்களைப் பிரிப்பது, பேசாமல் உணவை ஆர்டர் செய்வது போன்ற நடவடிக்கைகள்மூலம் சவால்களை மக்கள் உணர்ந்தனர்.

இளையோரும் முதியோரும் ஒன்றுகூடுவதே ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறது என்று மூத்த அமைச்சர் லீ கூறினார்.

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த 79 சிறார்க்குத் தொண்டூழிய மாணவர்கள் நடத்திய விளையாட்டுக் கூடங்களில் $50 மாதிரிப் பணம் வழங்கப்பட்டு, பொருள்களை வாங்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன்மூலம் நிதி மேலாண்மைத் திறன்கள் கற்றுத்தரப்பட்டன. மாணவர்களுக்குப் பள்ளிப் பைகளுடன் லெகோ பொம்மைகளும் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
லீ சியன் லூங்அங் மோ கியோசமூக மன்றம்