தங்கள் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீது அதிருப்தி கொண்டு, மாற்றத்திற்காகப் போராடி வரும் பாட்டாளிக் கட்சித் தொண்டர்கள் குழு ஒன்று, வரும் ஜூன் 28ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் அவரைப் பதவியிலிருந்து நீக்க இலக்கு வைத்துள்ளது.
ஒரு நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதற்காக சிங்குக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டிசம்பர் 2025ல் உயர் நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, அவருக்குப் போட்டியாக ஒருவரைத் தேடும் பணி அண்மைய வாரங்களில் தீவிரமடைந்துள்ளது. அதிருப்தியடைந்த இந்தக் குழுவினர், எதிர்க்கட்சியின் பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகியுள்ளனர்.
இருப்பினும், சிங்குக்கு எதிராகப் போட்டியிடுவதை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்று கட்சி வட்டாரங்கள் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தன. கட்சியைப் பகிரங்கமாக விமர்சித்த உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, அவர்கள் தங்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.
விவாதத்தில் அடிபட்ட பெயர்களில் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம், ஹவ்காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் ஆகியோர் அடங்குவர்.
மேலும், சிங் தமது தண்டனைத் தீர்ப்பின் காரணமாக பாட்டாளிக் கட்சியின் அரசியலமைப்பை மீறியதாகக் கண்டறிந்த மூவர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் அங்கம் வகித்த செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹீ டிங் ரு, ஜேமஸ் லிம் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டன.
பல கட்சித் தொண்டர்கள், நிலைமை இன்னும் நிலையற்றதாக இருப்பதாகவும், வாக்குப்பதிவு நாள் வரையிலும் கூட தொடர்ந்து மாறக்கூடும் என்றும் கூறினர்.
ஜூன் 28ஆம் தேதி, கட்சியின் உள்வட்டத்தைச் சேர்ந்த 100க்கும் சற்று அதிகமான கட்சித் தொண்டர்கள், சிங்கின் தலைமைப் பதவிக்கு வாக்களிப்பதற்காக இரண்டு கூட்டங்களில் கூடும்போது, இவை அனைத்தும் உச்சகட்டத்தை அடையும்.
முதலில், 2025 டிசம்பரில், 25 கட்சித் தொண்டர்கள் கோரியுள்ள ஒரு சிறப்பு மாநாடு நடைபெறும். அதில், சிங் தமது தண்டனைக்கு வழிவகுத்த செயல்கள் குறித்து விளக்கமளிக்குமாறு கேட்கப்படுவார்.
முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், தேர்தல் வேட்பாளர்களை உள்ளடக்கிய அந்தக் கட்சித் தொண்டர்கள், அவர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் பதவி விலகாத பட்சத்தில் அவரது தலைவிதியைத் தீர்மானிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்பிறகு, சிங் வகிக்கும் தலைமைச்செயலாளர் பதவி உட்பட, தனது தலைமையை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்காக, ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் தொண்டர்கள் மாநாட்டை பாட்டாளிக் கட்சி நடத்தும்.

