சிங்கப்பூரில் வெளிநாட்டு விற்பனையாளர் ஒருவரிடமிருந்து சமூக ஊடகங்கள் வாயிலாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் 18 வயது இளைஞர், 19 வயது இளம் பெண் ஆகிய இரு சிங்கப்பூரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 21ஆம் தேதியன்று பிடோக்கின் துவா கோங் பிளேஸ் மற்றும் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31 ஆகிய பகுதிகளில் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அங்குள்ள இரு குடியிருப்புப் பிரிவுகளில் நடத்தப்பட்ட சோதனையில், ஏறத்தாழ $2,300 வரி ஏய்ப்பு செய்யப்பட்ட 170க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இணையம் வழி வாங்கப்பட்ட இந்தச் சிகரெட்டுகள், அதிகாரிகளின் கண்பார்வையில் படாமல் இருப்பதற்காக நூடுல்ஸ் பொட்டலங்களுடன் சேர்த்து பைகளில் மறைத்து அனுப்பப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த இளைஞருக்காக புக்கிட் பாத்தோக்கில் சிகரெட் பைகளைப் பெற்றுக்கொண்ட பெண்ணும் இதில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த சுங்கத்துறையின் புலன்விசாரணை தொடர்கிறது.

