சிங்கப்பூருக்கு கடந்த 2024ஆம் ஆண்டு, உச்சத்துக்குச் சென்ற வெப்பநிலை, வழக்கத்துக்கு மாறான மழைப் பொழிவு என பருவநிலை பல வழிகளில் வித்தியாசமான ஆண்டாக விளங்கியது.
அத்துடன், 2019க்குப் பிறகு சென்ற ஆண்டுதான் ஜூலை மாதம் வறண்ட மாதமாக விளங்கியதுடன் டிசம்பர் மாதம் எப்போதும்போல் இல்லாமல் குறைந்த அளவு மழை பெய்தது. அதேசமயம், நவம்பர் மாதம் ஆண்டின் அதிக மழை பெய்த மாதமாக விளங்கியது.
மேலும், வழக்கத்துக்கு மாறாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் மழைப் பொழிவு அதிகமாக காணப்பட்டது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இவற்றுடன், பல காலமாக ஆண்டு சராசரி மழைப் பொழிவு 2,534.3 மில்லி மீட்டராக இருக்க, சென்ற 2024ஆம் ஆண்டின் மழைப் பொழிவு 2,739.8 மில்லி மீட்டராக இருந்தது என வானிலை ஆய்வகம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கை தெளிவுபடுத்தியது.
அதிகரிக்கும் வெப்பநிலை உலக அளவில் வெப்பமடைதலின் அறிகுறியாக இருக்கலாம். எனினும், 2024ஆம் ஆண்டின் வழக்கத்துக்கு மாறான மழைப் பொழிவு பருவநிலை மாற்றத்துக்கு தொடர்புடையது அல்ல என்று அறிக்கை சுட்டியது.
இதற்குக் காரணம், சிங்கப்பூரின் மழைப் பொழிவு ‘எல் நினோ’ தென் பருவகாற்று சுழற்சியையும் பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பின் வெப்பநிலையையும் பொறுத்தது என வானிலை ஆய்வகம் விளக்கியது.
மேலும், நீண்டகால நிலையில் அதிக மழைப்பொழிவு அடிக்கடி ஏற்படும் என்றபோதிலும் அதை பருவநிலை மாற்றத்துடன் நேரடியாகத் தொடர்புப்படுத்த முடியாது என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 2024ஆம் ஆண்டு ஆக அதிக வெப்பமான ஆண்டு என்று கூறிய அறிக்கை, அது 2019, 2016ஆம் ஆண்டுகளுக்கு ஈடாக உச்ச வெப்பநிலையாக 28.4 டிகிரி செல்சியஸ் பதிவானதாகத் தெரிவித்தது.