சிங்கப்பூரில் வளர்ந்துவரும் செல்வந்த வாடிக்கையாளர் குழுவைத் திறம்படப் பயன்படுத்தி 2030ஆம் ஆண்டுக்குள் தனது செல்வ நிர்வாக வருவாயை இரட்டிப்பாக்க இலக்கு கொண்டுள்ளது யுஓபி வங்கி.
அந்த வங்கி வியாழக்கிழமை (மே 7) வெளியிட்ட வருவாய் அறிக்கையில், முதலாம் காலாண்டில் லாபம் 4 விழுக்காடு குறைந்து $1.44 பில்லியனைத் தொட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அவ்வங்கி சிறப்பாகச் செயல்பட்டதாகப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டிய வளர்ச்சி இலக்குகளை வங்கியின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வீ யீ சியோங் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
“எங்கள் வங்கி இதுவரை போதுமான அளவு நாடாத, பெரிய மற்றும் பெருகிவரும் செல்வந்த வாடிக்கையாளர் தளத்தின் ஆதரவைப் பெற முயல்வோம். செல்வம் உள்ளிட்ட கணிசமான வாய்ப்புகள் அந்தத் தளத்தில் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இது நிலையான, இயல்பான வளர்ச்சியை எட்டுவதற்கான நீண்டகால வாய்ப்பை எங்களுக்கு வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.
நிர்வாகத்திடமுள்ள சொத்துகளை (AUM) பெருக்குவதிலும் அந்தச் சொத்துகளில் செய்யப்பட்ட முதலீட்டின் பரவலை அதிகரிப்பதிலும் வங்கி உடனடியாகக் கவனம் செலுத்த உள்ளது என்றும் திரு வீ தெரிவித்தார்.
இருப்பினும், அந்தச் சொத்துகள் தொடர்பான இலக்கு விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இந்நிலையில், வங்கியின் வருவாய் அறிக்கை வெளியான பின்னர், நண்பகல் இடைவேளையின்போது அதன் பங்கு விலை 0.33 விழுக்காடு குறைந்தது.

