தடையற்ற வர்த்தகத்தை ஆதரிக்கும் நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உருமாறும் உலக வர்த்தகச் சூழலுக்கு ஏற்ப மாறுவதற்கு ஒற்றுமையாகச் செயல்படவேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
அமெரிக்காவும் உலக நாடுகளும் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்புவது சிரமம் என்பதால் அது அவசியம் என்றார் அவர். ஏப்ரல் 2 அன்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பதில் வர்த்தகக் கொள்கையை அறிவித்தார்.
சிங்கப்பூர் பொருளியல் சங்கத்தின் வருடாந்தர விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது திரு லீ இவ்வாறு குறிப்பிட்டார்.
வரிகள் நடப்புக்கு வந்து, தன்னைப்பேணித்தனத்தைச் சார்ந்த புதிய வர்த்தகங்கள் உருவாகிவிட்டால் அரசியல் ரீதியாக அவற்றை அகற்றுவது சிரமம் என்றார் அவர்.
“வர்த்தகக் கொள்கை, பொருளியல் அளவில் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது. ஒருமுறை எடுத்த முடிவை மாற்ற முடியாது,” என்று அவர் சுட்டினார்.
சீனாமீது தமது முதல் தவணைக் காலத்தில் திரு டிரம்ப் விதித்த வரிகளை முன்னாள் அதிபர் ஜோ பைடன் மாற்றவில்லை என்ற அவர், அமெரிக்கா எதிர்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமா எனத் தெரியாது என்றும் சொன்னார்.
ஆனால், இதர நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை முயற்சிகளை அது நிறுத்தக்கூடாது என்று திரு லீ வலியுறுத்தினார்.
அனைத்துலக வர்த்தகத்தை அமெரிக்கா குறுகலான, இருதரப்பு, பரிவர்த்தனை சார்ந்த ரீதியில் பார்ப்பதாகவும் அந்தப் போக்கு உலக வர்த்தக அமைப்பின் கட்டமைப்பு நாடுகளுக்கு இடையே விரிவான, தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று என்னவெனில், பொருளியல் கொள்கைகளைப் பின்பற்றாமல் இருக்கலாம். ஆனால், பொருளியல் சட்டத்தைத் தள்ளிவிட முடியாது. பின்பற்றுகிறோமோ இல்லையோ, பொருளியல் சட்டம் எப்போதும் இருக்கும்,” என்றார் திரு லீ.
அமெரிக்கர்கள் இதர உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்துதான் ஆகவேண்டும் என்ற அவர், ஏதாவது ஒரு கட்டத்தில் அமெரிக்கா திரும்ப வந்து இன்னும் வெளிப்படையான ஆக்ககரமான விதத்தில் பங்கேற்கலாம் என்றும் கூறினார்.
அதற்கிடையில், இதர நாடுகள் ஒரே சிந்தனைகொண்ட பொருளியல்களுடன் பங்காளித்துவத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்ற திரு லீ, ஆசியான் அமைப்பை அதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.