சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் படம் நீர்ப்புட்டி ஒன்றில் பயன்படுத்தப்பட்டது மரியாதைக்குரியது என்று கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறியிருக்கிறார்.
மக்கள் செயல் கட்சியின் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போ லி சான் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூர் நிறுவனம் ஒன்றின் நீர்ப்புட்டியில் திரு லீயின் படத்தைப் பயன்படுத்துவது, அவரது பெயரையும் படத்தையும் பயன்படுத்துவதன் தொடர்பிலான வழிமுறைகளை மீறுகிறதா என்று திருவாட்டி போ கேள்வி எழுப்பினார். அவ்வாறு மீறினால், அதிகாரிகளால் அந்தப் பொருளை மீட்டுக்கொள்ள முடியுமா என்றும் அவர் வினவினார்.
முன்னதாக திரு லீயின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்தைக் கொண்ட ‘கிரிசாந்தமம்’ தேநீர்க் கலன்களைக் கொடுப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் உள்ளூர் உணவு, பான நிறுவனமான ‘இயோஸ்’ அறிவித்திருந்தது.
சிங்கப்பூரை ஒரு தோட்ட நகரமாக உருமாற்றியதில் திரு லீயின் பங்களிப்புக்குப் புகழாரம் சூட்டும் நோக்கில் அந்நீர்ப்புட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக ‘இயோஸ்’ குறிப்பிட்டது.
ஆனால், அதன் தொடர்பில் இணையத்தில் குறைகூறல்கள் எழுந்தன. சொந்த நலனுக்காக திரு லீயின் படம் வர்த்தகப் பொருள்களில் பயன்படுத்தப்பட்டதாகச் சிலர் கூறினர். வேறு சிலரோ, நீர்ப்புட்டிகள் பயன்படுத்தப்பட்டதும் அவை குப்பைத் தொட்டிகளில் தூக்கி எறியப்படும் என்று கூறினர்.
இருப்பினும், சரியான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய ‘இயோஸ்’, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சை நாடியதாகத் திரு டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.