சிங்கப்பூருக்குச் சொந்தமான லசாரஸ் தீவு அருகில் உள்ள கடற்பகுதியில் நீந்திய பிறகு, முகம் குப்புற மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்தியப் பாடகர் ஸுபீன் கார்க்கின் மரணம் குறித்த விசாரணையில், இது தற்செயலாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று (மார்ச் 25) தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்ட அரசு மரண விசாரணை அதிகாரி ஆடம் நகோடா, தமக்கு முன்னால் இருந்த ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, கடலோரக் காவற்படையின் விசாரணை முடிவுடன் உடன்படாதிருக்க எந்தக் காரணமும் இல்லை என்று கூறினார்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில், மரணத்திற்கான காரணம் நீரில் மூழ்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகரான ஸுபீன் கார்க், 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதியன்று மது அருந்தியதோடு, படகில் இருந்து குதிப்பதற்கு முன்பு உயிர்காக்கும் அங்கியை அணிய மறுத்துவிட்டதாக, ஜனவரி 14ஆம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் முதல் நாளில் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் டேவிட் லிம் சாட்சியமளித்தார்.
அவரது நண்பர்கள் அவரை மீண்டும் படகுக்கு வருமாறு வற்புறுத்திய போதிலும், ஸுபீன் கார்க் அசைவற்ற நிலையில் காணப்பட்டார். அவர் மீண்டும் படகிற்கு இழுக்கப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் அது பலனளிக்கவில்லை.
சிங்கப்பூரில் உள்ள அசாமிய சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடகிழக்கு இந்தியத் திருவிழா’ எனும் கலாசார விழாவிற்காக அவர் சிங்கப்பூர் வந்திருந்தார். அவர் செப்டம்பர் 20ஆம் தேதியன்று மேடையில் பாடத் திட்டமிடப்பட்டிருந்தது.

