இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பொட்டல விநியோக இணைய மோசடிகளில் குறைந்தது 362பேர் பாதிக்கப்பட்டனர் எனச் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
மொத்தம் $560,000 பணத்தை அவர்கள் மோசடிக்காரர்களிடம் இழந்ததாக அது கூறியது.
குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சீனப் புத்தாண்டு போன்ற பண்டிகை நாள்கள் தொடர்ந்து வருவதால் இணையம் வழி பொருள்கள் வாங்குபவர்களைக் குறிவைத்து மோசடிகாரர்கள் ஏமாற்ற அதிக வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி காவல்துறை எச்சரித்துள்ளது.
“பொதுவாக, வாங்கிய பொருள்களை விநியோகம் செய்வதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என மோசடிக்காரர்கள் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்புவர். இவை சிங்போஸ்ட் போன்ற முறையான அஞ்சல், மின் வணிகத் தளவாட நிறுவனங்கள் போன்றவற்றால் நிறுவனங்களால் அனுப்பப்படும் செய்திகளை ஒத்திருக்கும்.மேலும் போலி இணையத்தளங்களுக்கு இட்டுச்செல்லும் இணைப்புகளும் அவற்றில் இருக்கும்,” என இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, ‘ஸ்கேம் ஷீல்டு’ போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்படி காவல்துறை அறிவுறுத்தியது.
மேலும் தனிப்பட்ட கணக்குகளுக்கான இரண்டு அம்ச அங்கீகாரம் போன்ற பாதுகாப்பு அம்சங்களை அமைக்குமாறு பொதுமக்களுக்கு அது நினைவூட்டியது.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இணையப் பரிவர்த்தனை வரம்புகளை அமைக்க வேண்டும். இதன் மூலம் மோசடி செய்பவர்கள் திருடக்கூடிய பணத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாம் என்று காவல்துறை அவ்வறிக்கையில் தெரிவித்தது.