மத்தியக் கிழக்கில் நடக்கும் போர் தொடர்வதால் பயணிகள், சிப்பந்திகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அந்த வட்டாரத்துக்குச் சேவையாற்றும் மொத்தம் 26 எஸ்ஐஏ, ஸ்கூட் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்தப் பயணச் சேவைகள் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரையில் முன்பதிவு செய்யப்பட்டவை.
அன்றாடம் இரு முறை செல்லும் சிங்கப்பூருக்கும் துபாய் நகருக்குமான இருவழிச் சேவைகள் (SQ494 & SQ495) இதில் அடங்கும். துபாய்க்குச் சென்று திரும்பும் இந்த பயணங்களில் மொத்தம் 16 சேவைகள் ரத்தாகியுள்ளன.
ஜெடா நகருக்குச் சென்று திரும்பும் குறைந்த கட்டணத்தில் இருவழிச் சேவை வழங்கும் ஸ்கூட் விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி 28, மார்ச் 2,3,5,7 ஆகிய தேதிகளில் ஜெடா செல்லவும் திரும்பவும் இருந்த (TR596 &TR597) பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேல் விவரங்களுக்கு பயணிகள் எஸ்ஐஏ நிறுவனத்தின் இணையப் பக்கத்தை நாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
“மத்தியக் கிழக்கின் போர் நிலவரத்தை கண்காணித்து விமானப் பயணப் பாதைகளை முறையாக சீரமைப்போம். பயணிகளோடு சிப்பந்திகளின் பாதுகாப்பே எஸ்ஐஏ குழுமத்தின் தலையாய முன்னுரிமை,” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

