வாசகர்களுக்கு எச்சரிக்கை: பொய்யான செய்திகளுடன் பிரமுகர்களின் படங்கள்

வாசகர்களுக்கு எச்சரிக்கை: பொய்யான செய்திகளுடன் பிரமுகர்களின் படங்கள்

2 mins read
f3de9aff-d2ed-4afd-9ee4-f10127816efd
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிஎன்ஏ செய்தி நிறுவனங்களின் ஊடகங்களைப் போல தோற்றமளிக்கும் தளங்களில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொய்யானத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்னிலக்க நாணயம் தொடர்பான மோசடிகளில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் போன்று தோற்றமளிக்கும் பக்கங்களுடன் பொய்யான கட்டுரைகள், அதன் செய்தியாளர்கள் எழுதியதாகச் சொல்லப்படும் கட்டுரைகள் போன்றவை நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமர் லாரன்ஸ் வோங் அல்லது ஓசிபிசி தலைமை நிர்வாகி ஹெலன் வோங் உள்ளிட்ட பிரபலங்கள் குறிப்பிட்டதாகக் கூறப்படும் குறிப்புகளுடன் போலியான கட்டுரைகள் போலியான இணையத் தளங்களில் மின்னிலக்க நாணயத்தை புகழ் பாடுவதாக இருக்கின்றன.

இந்த இணையத் தளங்களில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சின்னமும் அதன் வடிவமைப்பும் உண்மையானது போல பிரதிபலிப்பதால் வாசகர்கள், ஒரு கணக்கை உருவாக்கி அவர்களின் அடையாளம், வங்கி விவரங்களை வெளியிட வகைசெய்கிறது.

சிஎன்ஏ சின்னமும் மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற முதலீட்டுத் திட்டம் மூலம் ஒரே மாதத்தில் $350 முதலீட்டில் $15,500 சம்பாதிக்கலாம் என்று ஊக்குவிக்கும் போலிக் கட்டுரைகளில் சிஎன்ஏ சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் லீ சியன் லூங்கின் மனைவியும் தெமாசெக் அறக்கட்டளையின் தலைவருமான திரு ஹோ சிங் பெயரிலும் மோசடி விளம்பரங்கள் இடம்பெற்று வருகின்றன.

வாட்ஸ்அப்பில் கிடைக்கும் இலவச உண்மை சரிபார்ப்புச் சேவையான ‘செக்மேட்’டில் 2023லிருந்து இதுபோன்ற 27 போலி இணையத் தளங்கள் உருவாக்கப்பட்டது பற்றி பதிவாகியுள்ளது.

இந்தச் சேவை, சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்து சரிபார்க்க உதவுகிறது.

ஜனவரி மாதத்தில் மட்டும் போலித் தளங்களில் பாதிக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

அவற்றில் பெரும்பாலானவையில் உள்ளூர் செய்தி நிறுவனங்களின் சின்னம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் செக்மேட்டின் நிறுவனர் டான் பிங் வென் தெரிவித்தார்.

மற்றொரு சரிபார்க்கும் தளமான ‘பிளாக் டாட் ரிசர்ச்’, ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட போலித் தளங்களை எதிர்கொள்கிறது. இவற்றில் பெரும்பாலானவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அல்லது சிஎன்ஏ தோற்றத்தைப் பயன்படுத்தப்படுவதாக அதன் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான நிக்கோலஸ் ஃபாங் தெரிவித்தார்.

இத்தகைய போலித் தளங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தங்களுடைய சொந்த விவரங்களையும் வங்கி விவரங்களையும் பூர்த்தி செய்யும் மோசடிப் படிவங்களுக்கு வாசகர்களை இட்டுச் செல்வதாக அவர் கூறினார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியரான ஜெய்மி ஹோ, செய்தி நிறுவனங்கள், அவற்றின் சின்னங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

“எங்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிக்காரர்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விதிவிலக்கல்ல,” என்றார் அவர்.

“இதற்கு சிறந்த மாற்று ஏற்பாடு சமூகத்துடன் சேர்ந்து இணையக் கல்வியறிவை மேம்படுத்துவது அது மட்டுமல்லாமல் சந்தேகமான உள்ளடக்கங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், அதன் செயலி மற்றும் எங்களுடைய அனைத்து சமூக ஊடகப் பக்கங்களில் சரிபார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வாசகர்களுக்கு உதவ வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

2022லிருந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் அதிகரித்ததால் அதனைப் பயன்படுத்திவரும் மோசடி இணையத் தளங்களும் அதிகரித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காவல்துறை, முதலீடுகளை செய்ய ஊக்குவிக்கும் பொய்யானத் தகவல்கள் இடம்பெற்றுள்ள மோசடி தளங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியது.

இது குறித்து ஸ்கேம்ஷீல்ட் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்